| சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் | 
| பன்னிரெண்டாம் திருமுறை | 
| இரண்டாம் காண்டம் | 
| 9. கறைக் கண்டன் சருக்கம் | 
| 9.1 கணம்புல்ல நாயனார் புராணம் | 
4060 
திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கி 
பெருக்கு வட வெள் ஆற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில் 
வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் 
இருக்கு வேளூர் என்பது இவ் உலகில் விளங்கும் பதி. | 
1 | 
4061 
அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்த 
எப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் 
ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் 
மெய் பொருளாவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார். | 
2 | 
4062 
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று 
ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயிலலுள் எரித்து 
நா ஆரப் பரவுவார் நல்குரவு வந்து எய்தத் 
தேவதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார். | 
3 | 
4063 
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் 
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த 
வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க 
இல்லிடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில். | 
4 | 
4064 
ஆய செயல் மாண்டதற்பின் அயல் அவர் பால் இரப்பஞ்சி 
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து 
மேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய்மாறித் 
தூயதிரு விளக்கு எரித்தார் துளக்கறு மெய்த் தொண்டனார். | 
5 | 
4065 
இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் 
மெய் வருந்தி அரிந்து எடுத்துக் கொடுவந்து விற்கும்புல் 
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இப்பணி ஒழியார் 
அவ்வரிபுல் வினைமாட்டி அணி விளக்காயிட எரிப்பார். | 
6 | 
4066 
முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல் 
மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை மெய்யான 
அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை 
என்புருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார். | 
7 | 
4067 
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப் 
பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு 
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து 
எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார். | 
8 | 
4068 
மூரியார் கலி உலகின் முடி இட்ட திருவிளக்குப் 
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி 
வேரியார் மலர்ச் சோலை விளங்கு திருக்கடவூரில் 
காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம். | 
9 | 
| திருச்சிற்றம்பலம் | 
| 9.3 நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம் | 
4074 
தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலை 
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு அடைந்த 
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த 
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால். | 
1 | 
4075 
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே 
தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்து 
சொன்னாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட 
பொன்னாரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார். | 
2 | 
4076 
ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்ற 
சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப் 
பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் 
காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் நடக்கின்றார். | 
3 | 
4077 
எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர் 
படுத்த நெடுங் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும் 
அடுத்து அமர் செய் வய்வர் கரும் தலையும் மலையும் அலை செந்நீர் 
மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக. | 
4 | 
4078 
வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் 
கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் 
வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச் 
சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க. | 
5 | 
4079 
தீயுமிழும் படை வழங்கும் செருக்களத்து முருக்கும் உடல் 
தோயும் நெடும் குறுதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடி 
போய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப் 
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க. | 
6 | 
4080 
இனைய கடுஞ் சமர் விளைய இகலுழந்த பறந்தலையில் 
பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக் குடைந்து 
முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப் 
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து. | 
7 | 
4081 
வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கு அரசியார் 
களப மணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார் 
இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் 
அளவில் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார். | 
8 | 
4082 
திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்க 
உரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார் 
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே 
பரசு பெரும் சிவலோகத்தில் இன் புற்று பணிந்து இருந்தார். | 
9 | 
4083 
பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராந் 
தென்மதுரை மாறனார் செம் கமலக் கழல் வணங்கிப் 
பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத் 
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலைதொழுவாம். | 
10 | 
| திருச்சிற்றம்பலம் | 
| 9.4 வாயிலார் நாயனார் புராணம் | 
4084 
சொல் விளங்கு சீர்த் தொண்டைநல் நாட்டின் இடை 
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி 
பல்பெரும் குடி நீடு பரம்பரைச் 
செல்வம் மல்கு திருமயிலா புரி. | 
1 | 
4085 
நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத் 
தேடும் அப்பெரும் சேம வைப்பாம் என 
ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி 
மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால். | 
2 | 
4086 
காலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்து 
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் 
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா 
சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம். | 
3 | 
4087 
தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத் 
துவள் பதாகை நுழைந்து அணை தூமதி 
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி 
உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால். | 
4 | 
4088 
வீதி எங்கும் விழா அணிக் காளையர் 
தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர் 
ஓதி எங்கும் ஒழியா அணிநிதி 
பூதி எங்கும் புனை மணிமாடங்கள். | 
5 | 
4089 
மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த் 
தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல 
நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார் 
தன்மை வாயிலார் என்னும் தபோதனர். | 
6 | 
4090 
வாயிலார் என நீடிய மாக்குடித் 
தூய மா மரபின் முதல் தோன்றியே 
நயனார் திருத்தொண்டின் நயப்புறு 
மேய காதல் விருப்பின் விளங்குவார். | 
7 | 
4091 
மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி 
உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி 
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி 
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார். | 
8 | 
4092 
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும் 
நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே 
திகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப் 
புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார். | 
9 | 
4093 
நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள் 
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால் 
பேராத நெறி பெற்ற பெருந் தகையார் தமைப்போற்றிச் 
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம். | 
10 | 
| திருச்சிற்றம்பலம் | 
| 9.5 முனையடுவார் நாயனார் புராணம் | 
4094 
மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டு 
நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழுந்தேன் 
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் 
சேறு நறுவாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர். | 
1 | 
4095 
விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர் 
களம் கொள் மிடற்றுக் கண் நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும் 
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த 
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார். | 
2 | 
4096 
மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர் வந்து தம்பால் மா நிதியம் 
ஆற்றும் பரிசு பேசினால் அதன் நடுவு நிலை வைத்து 
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்றுச் சென்று எறிந்து 
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார். | 
3 | 
4097 
இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள் 
சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும் 
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனியுள்ளுறுத்த கலந்து அளித்து 
மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார். | 
4 | 
4098 
மற்றிந் நிலை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி 
உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால் 
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் 
முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன்னுடையார். | 
5 | 
4099 
யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார் தமக்கு இன்பம் 
மேவ அளிக்கும் முனை அடுவார் விரைப் பூம் கமலக் கழல் வணங்கி 
தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செம்கோல் முறை புரியும் 
காவல் பூண்ட கழற் சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம். | 
6 | 
| சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி | 
4100 
செறிவுண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும் 
குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் 
வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்க 
பறியுண்டவர் எம்பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே. | 
7 | 
| திருச்சிற்றம்பலம் | 
| கறைக் கண்டன் சருக்கம் முற்றிற்று. |